பெய்ஜிங்: சீனாவில் யுலின் நகரில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்த வெடிப்பில் சுமார் 150 பேர் காயம் அடைந்ததாகவும் சின்ஹுவா தகவல்கள் கூறின. அந்த வெடிப்பில் ஐந்து கட்டடங்கள் முற்றாக நாசமானதாகவும் மேலும் பல கட்டடங்கள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக வெடிபொருட்களைச் சேமித்து வைத்திருந்ததால் அந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்புப் பணிகள் முடிவடைந்த நிலையில் காயமுற்றவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெய்ஜிங்கில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நடப்பதை முன்னிட்டு பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஷாங்சி மாநிலத்தில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.