கோலா கங்சார்: மலேசியாவில் உள்ள பேராக் மாநிலத்தின் தலைநகரமான ஈப்போவிலிருந்து ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.59 மணிக்கு நிகழ்ந்தது. ஆம்புலன்சில் பயணம் செய்துகொண்டிருந்த நான்கு மருத்துவமனை ஊழியர்கள் காயமின்றி தப்பித்தனர். ஆம்புலன்சின் 80 விழுக்காடு பகுதி தீக்கு இரையானது. அண்மையில் ஜோகூர் பாருவில் உள்ள சுல்தானா அமினா மருத்துவமனையில் இருமுறை தீச்சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து இந்த ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மலேசியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் தீச்சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் டாக்டர் எஸ். சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். அப்படியே தீச்சம்பவம் நிகழ்ந்தாலும் அதை எப்படிச் சமாளிப்பது, மருத்துவமனையில் இருப்பவர்களை எவ்வாறு பத்திரமாக வெளியேற்றுவது என்பது குறித்து அமைக்கப்படும் குழு ஆராய்ந்து வழிகாட்டி நெறிமுறைகளை நடைமுறைக்குக் கொண்டு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.