ஹனோய்: வியட்னாமில் முதன் முறையாக ஒரு குழந்தைக்கு மைக்ரோசிஃபாலி நோய் பாதித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வியட்னாமின் டக் லாக் மாநிலத்தில் நான்கு மாதக் குழந்தைக்கு அந்நோய் பாதித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அக்குழந்தையின் தாயார் கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு ஸிக்கா கிருமி தொற்றியிருந்ததாக அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வியட்னாமில் இதுவரை 9 பேருக்கு ஸிக்கா கிருமி தொற்றியதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஸிக்கா கிருமி தொற்றினால் பாதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மைக்ரோசிஃபாலி நோயால் பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவித்துள்ளனர். இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகும் குழந்தைகளின் தலை சிறியதாக இருக்கும். அத்துடன் அக்குழந்தை களின் மூளை வளர்ச்சியையும் அந்நோய் பாதிக்கும்.