பெய்ஜிங்: அதிநவீன தொழில்நுட்பத்துடன் எதிரி நாட்டின் ரேடார் திரையில் சிக்காமல் பறந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் மிக்க 'செங்டு J-20' ரக போர் விமானத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவின் ஸுஹாய் நகரில் நடைபெற்றுவரும் விமான கண்காட்சியில் முதன் முறையாக இந்த விமானம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக தெற்கு சீனாவில் இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அமெரிக்கா தயாரித்து வரும் அதிநவீன போர் விமானமான 'F-22 ரப்ட்டர்' என்ற விமானத்துக்கு சவாலாக சீனாவின் இந்த 'செங்டு J-20' போர்விமானம் அமையும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனா அதன் ராணுவத் திறனை தொடர்ந்து நவீனப்படுத்தி வரும் வேளையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 'செங்டு J-20' என்ற அதிநவீன போர் விமானம் உலகநாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அதிக உயரத்தில் பறந்து, குண்டுகளை வீசி தாக்குதல்கள் நடத்தக்கூடிய வகையில் இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.