பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர், எதிர்க்கட்சித் தலைவரும் தற்போது சிறையில் இருப்பவருமான அன்வார் இப்ராகிம் ஆகியோர் 18 ஆண்டுகளாக மலேசிய அரசியலில் எதிரிகளாக வலம் வந்த போதிலும் அவர்களது துணைவியர் இருவரும் சந்தித்து 45 நிமிடங்களுக்கு உரையாடியுள்ளனர். இரு தரப்புக்குமான சமரச முயற்சி என இதனை கவனிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சந்திப்பின்போது இருவரும் தங்களது முந்தைய சந்திப்புகளை நினைவுகூர்ந்து மகிழ்ந்ததாகவும் பரிசுப் பொருட்களைப் பரிமாறிக்கொண்டதாகவும் திருவாட்டி ஹஸ்மாவுடன் சென்றிருந்த முன்னாள் பத்து கவான் அம்னோ துணைத் தலைவர் கைருதீன் அபு ஹாசன் கூறினார். கடந்த செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தேசிய பாதுகாப்பு மன்றச் சட்டத்திற்கு எதிராக அன்வார் தொடுத்த வழக்கின் விசாரணையின்போது திரு மகாதீரும் திரு அன்வாரும் சந்தித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அன்வாரின் மனைவி டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலின் கோலாலம்பூர் இல்லத்துக்கு டாக்டர் மகாதீரின் மனைவி சிட்டி ஹஸ்மா முகமது அலி (வலது) கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். படம்: கைருதீன் அபு ஹாசன்