கோலாலம்பூர்: மலேசியாவில் பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதுவுக்கும் நாளுக்கு நாள் கடுமையாகிவரும் வாய்ச் சண்டைக்கு இடையே நாட்டின் புதிய மாமன்னராக பொறுப்பேற்க உள்ள கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆறாம் சுல்தான் முகம்மதின் பதவியேற்பு சடங்கில் மகாதீருக்கு அழைப்பில்லை என்று கூறப்படுகிறது.
இம்மாதம் 13ஆம் தேதி மாமன்னராக பதவியேற்க உள்ள கிளந்தான் மாநில மன்னரின் பதவியேற்பு விழாவுக்கு டாக்டர் மகாதீருக்கு ஏற்கெனவே விடுக்கப்பட்ட அழைப்பை மலேசியாவின் மன்னர் சபை மீட்டுக்கொண்டுள்ளதாக மலேசியாகினி இணையத்தள ஊடகத் தகவல் டாக்டர் மகாதீரின் உதவியாளரை மேற்கோள்காட்டிக் கூறியது.
இது குறித்து மலேசியாகினியைச் சேர்ந்த நபர் ஒருவர் மாமன்னர் மாளிகையைத் தொடர்பு கொண்டபோது மாளிகையில் உள்ளவர்கள் செய்தித் தகவலை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.