யங்கூன்: மியன்மாரில் ரோஹிங்யா பிரச்சினைக்குத் தீர்வு காண மியன்மார் அரசாங்கத்தை ஆசியான் நாடுகள் நெருக்க வேண்டும் என்று மலேசியா கேட்டுக்கொண்டது. ரோஹிங்யா பிரச்சினை வட்டார நாடுகளின் அக்கறைக்குரிய பிரச்சினை என்றும் இதனால் ரோஹிங்யா முஸ்லிம் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை ஆசியான் நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் மலேசிய வெளியுறவு அமைச்சர் அனிஃபா அமான் கேட்டுக்கொண்டார்.
மியன்மாரின் சிறுபான்மை இனத்தவர்களான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீது அந்நாட்டு ராணுவத்தினர் அட்டூழியங்கள் புரிவதாகக் கூறப்படுவது குறித்து ஆசியான் நாடுகள் புலன் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்யா மக்களின் மனித உரிமைகளை மேம்படுத்தும் நடவடிக்கை மிகவும் மெதுவாக நடைபெறுவதாக அவர் குற்றம் சாட்டினார். ரோஹிங்யா விவகாரத்தால் மியன்மார் நெருக்கடிக்கு உள்ளாகி யிருக்கிறது. மியன்மாரில் ஒன்று கூடியுள்ள ஆசியான் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நிலை குறித்து முக்கியமாக விவாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது.
இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுதி (இடது) உள்ளிட்ட ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுடன் திருவாட்டி ஆங் சான் சூச்சி. படம்: ஏஎஃப்பி