பெய்ஜிங்: தென்சீனக் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சீனா கைப்பற்றிய அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ஆய்வுக் கலத்தை அமெரிக்கா விடம் திருப்பிக் கொடுத்துவிட்டதாக சீனா கூறியுள்ளது. இதனை அமெரிக்க தற்காப்பு அமைச்சும் உறுதிப்படுத்தியுள் ளது. சென்ற வாரம் அமெரிக்கா வின் ஆளில்லா ஆய்வுக் கலத்தை சீனா கைப்பற்றியது முதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்தது. சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்கா கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதை சீனா குறை கூறி வருகிறது.
இந்நிலையில் அந்த ஆய்வுக் கலத்தை சீனா திருடிச் சென்று விட்டதாகவும் அதனை சீனாவே வைத்துக்கொள்ளட்டும் என்றும் அமெரிக்க அதிபராக பொறுப் பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவை சினமடையச் செய்தால் அதன் விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் என்று சீனா எச்சரித்துள்ளது. தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி வரும் திரு டிரம்ப்பின் செயல்கள் சீனாவை சினமடையச் செய்துள்ளதாக குளோபல் டைம்ஸ் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.