கோலாலம்பூர்: மலேசியாவில் ஐஎஸ் தொடர்புடைய 7 பேரை அண்மையில் கைது செய்திருப்பதாக மலேசியப் போலிசார் கூறினர். அவர்களில் நால்வர் வெளிநாட்டினர் என்று மலேசியா கூறியது. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் குழுவுடன் சேர அந்த நாடுகளுக்குச் சென்ற மலேசியர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.
சிரியாவில் ஐஎஸ் குழுவுடன் சேர்ந்து சண்டையிட்டதில் 18 மலேசியர்கள் கொல்லப்பட்டதாக மலேசியப் போலிசார் கூறினர். மேலும் 7 மலேசியர்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறின. இந்நிலையில் தாக்குதல் நடத்த சதித் தீட்டம் தீட்டிய சந்தேகப்பேர்வழிகள் என்று சந்தேகிக்கப்பட்ட மூவரை கைது செய்திருப்பதாக இந்தோனீசியப் போலிசார் கூறினர். ஜாவா தீவுக்கு அருகே தற்கொலைத் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருந்ததாக போலிசார் சந்தேகிக் கின்றனர்.