பெர்லின்: ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடந்த தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பெர்லின் தாக்குதலுக்கும் அந்த சந்தேக நபருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லாததால் அவர் விடுவிக்கப் பட்டதாக போலிசார் கூறினர். அதனைத் தொடர்ந்து அத் தாக்குதலுக்கு காரணமானவர் கள் இன்னும் பிடிபடவில்லை என்பதை போலிஸ் அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். பெர்லின் நகர கிறிஸ்துமஸ் சந்தையில் கூட்டத்தினர் மீது லாரியை மோதி பலரை கொன்று குவித்தவனை போலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
"தாக்குதலுக்குக் காரணமானவன் அல்லது காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்யும்வரை நாங்கள் யாரும் ஓய மாட்டோம்," என்று ஜெர்மன் உள்துறை அமைச்சர் தாமஸ் டி மாய்ஸியர் கூறினார்.
பெர்லின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விடுமுறை கால மற்றும் விழாக்கால சந்தைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் 'யூனியன் ஸ்கொயர் ஹாலிடே' சந்தைப் பகுதியில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக போலிசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்