ஜோகூர்பாரு: ஜோகூர் மாநிலத் தில் வெள்ளநிலவரம் சற்று மேம்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதார மற்றும் சுற்றுப்புறக் குழுவின் தலைவர் அயுப் ரஹ்மாட் கூறியுள்ளார். ஜோகூர்பாரு, மெர்சிங், பத்து பஹாட், கோத்தா திங்கி ஆகிய நான்கு வட்டாரங்களில் உள்ள அனைத்து நிவாரண நிலையங்கள் மூடப்பட்டுவிட்டதாகவும் அவர் சொன்னார்.
அதே நேரத்தில் சிகாமட், தங்காக், குளுவாங், மூவார் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கி யிருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும் அந்த நிலையங்கள் தொடர்ந்து திறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சிகாமட்டில் உள்ள 47 நிலையங்களில் 1,070 குடும்பங் களைச் சேர்ந்த 4,022 பேர் தங்கியுள்ளனர். தங்காக்கில் உள்ள 12 முகாம்களில் 400 குடும்பங்களைச் சேர்ந்த 1,490 பேர் தங்கியுள்ளனர். குளுவாங்கில் உள்ள முகாமில் 9 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். மூவாரில் 125 குடும்பங்களைச் சேர்ந்த 440 பேர் தங்கியுள்ளனர்.
ஜோகூர், கிளந்தான், திரங்கானு, பாகாங், சிலாங்கூர், சாபா ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 6,000 வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மலேசிய தற்காப்பு அமைச்சர் ஹிசாமுதின் ஹுசேன் கூறியுள்ளார்.