கோத்தா கினபாலு: மலேசியாவில் சீனப்புத்தாண்டின் முதல் நாளில் 31 பேருடன் காணாமல்போன படகின் ஓட்டுநரும் சிப்பந்தியும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பிற்பகல் இரண்டு மணி அளவில் இருவரும் கண்டுபிடிக்கப் பட்டனர் என்று மலேசிய கடலோர அமலாக்கப் பிரிவின் அதிகாரி ரஹிம் ரம்லி குறிப்பிட்டார். புலாவ் தீகாவுக்கும் சமராங் பெட்ரோலிய மேடைக்கும் இடையே உள்ள நீரிணையில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார். கடந்த சனிக் கிழமை காலை 9.00 மணிக்கு சாபாவின் கோத்தா கினபாலுவில் உள்ள தஞ்சோங் ஆரு படகு முனையத்திலிருந்து பிரபல சுற்று லாத் தலமான புலாவ் மங்கால் தீவை நோக்கிப் படகு பயணம் செய்தது.
இந்தப்படகில் உயிரோடு மீட்கப்பட்ட இருவரைத் தவிர மற்ற 28 பேரும் சீன நாட்டைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகள். அதே நாள் இரவு 9.50 மணி அளவில் 12 மணி நேரம் ஆகியும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புலாவ் மங்கால் தீவைப் படகு சென்றடைய வில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று இரவே 10.15 மணி அளவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இதில் கடற்படை, காவல்துறை, விமானப் படை உட்பட மற்ற அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. மலேசியா அதி காரிகளுடன் தொடர்பு கொண்ட சீனாவின் தூதரகம், சீன சுற்றுலாப் பயணிகளை மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தியது. நேற்று மாலை கடைசியாக வெளியான தகவலில் 22 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக வும் மூவர் இறந்தனர் என்றும் ஆறு பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.