ஷா ஆலம்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் செயல்படும் சிற்றுண்டி சாலையின் ஒப்பந்தத்தை நீட்டிப் பதற்காக கையூட்டுப்பெற்ற தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நேற்று முன்தினம் எட்டு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ரவாங் தமிழ்ப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய எம். சுப்பிரமணியம், 56, சிற்றுண்டி சாலை உரிமையாளரிடமிருந்து மொத்தம் 4,400 ரிங்கிட்டை கையூட்டுப் பெற்றார். கடந்த 2014ஆம் ஆண்டில் காசோலையாக 1,500 ரிங்கிட்டும் 2,900 ரிங்கிட் ரொக்கமாகவும் கே. தேவகா என்பவரிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் வாதிட்ட அவரது வழக்கறிஞர் எம். ஆதிமூலன், அந்தப் பணத்தைப் பள்ளிக்கே அவர் செலவழித்துவிட்டதால் குறைவான தண்டனை விதிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் பொது நலன்களைக் கருத்தில் கொண்டு சுப்பிரமணியத்துக்குக் கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று வற்புறுத்திய மலேசிய ஊழல் தடுப்புப்பிரிவின் அரசு தரப்பு துணை வழக்கறிஞர் முஹமட் ஷுக்ரி அபு செமான், அதிகாரத்தை அவர் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாகக் கூறினார்.
முன்னாள் தலைமை ஆசிரியர் எம். சுப்பிர மணியத்தை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். படம்: பெர்னாமா