மாஸ்கோ: ரஷ்யாவில் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. அதற்கான சட்டம் நேற்று முன்தினம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம், வன்முறையில் ஈடுபட்டவர்கள் உறவினர்களாக இருப்பின் அது குற்றவியல் குற்றமாகக் கருதப்படாமல் சிவில் குற்றமாகக் கருதப் படும். அதே சமயம் பெரிய காயம் ஏற்படும் வகையில் அந்தக் குற்றம் இருப்பின் அது குற்றவியல் சார்ந்த குற்றமாகவே கணக்கில் கொள்ளப்படும். முன்பிருந்த சட்டத்தின்படி குடும்ப வன்முறைக் குற்றங்களுக்கு கூடிய பட்சம் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
இந்தப் புதிய சட்டம் குற்றம் புரிவோருக்குச் சாதகமாக உள்ளது என்றும் இதனால் குடும்ப வன்முறை பற்றி போலிசில் கூறப்படும் புகார்கள் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. தண்டனை குறைக்கப்பட்டதால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. ரஷ்யாவில் ஆண்டுதோறும் 14,000 பெண்கள் கணவன், உறவினர்களின் வன்முறையில் கொல்லப்படுகின்றனர் என்கிறது ஐநா 2010ல் வெளியிட்ட அறிக்கை என்று கூறுகிறது கார்டியன் இதழ்