ஜகார்த்தா: இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒரு சில இடங்களில் 1.5 மீட்டர் உயரத்திற்கு நீர் தேங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பல ஊழியர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து வீடுகளிலேயே இருக்க வேண்டிய நிலை. பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு சில பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளநீரைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு வடிகால் முறை சிறப்பாக இல்லாத காரணத்தால் மோசமான வெள்ளப்பெருக்கால் ஜகார்த்தா பாதிக்கப்பட்டிருப்பதாக இந்தோனீசியாவின் பேரிடர் நிர்வாக அமைப்பின் பேச்சாளர் சுடோபோ புர்வோ நக்ரோவோ கூறினார்.
வெள்ளநீர் தேங்கியுள்ள பகுதியிலிருந்து வெளியேறும் மக்கள், ரப்பர் படகின் உதவியுடன் வெள்ளநீரைக் கடந்து செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி