கோலாலம்பூர்: வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை தொடர்பில் மலேசியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே பூசல் நீடிக்கும் வேளையில் வடகொரியத் தூதரை மலேசியா வெளியேற்றியது. அத்தூதர் மலேசியாவிலிருந்து வெளியேற மலேசிய அதிகாரிகள் 48 மணி நேரம் காலக்கெடு விதித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து வடகொரியத் தூதர் காங் சோல் நேற்று மலேசியாவிலிருந்து வெளியேறியதாக தகவல்கள் கூறின.
கிம் ஜோங் நாம் கொலை குறித்து மலேசியா மேற்கொண்டு வரும் விசாரணையை திரு காங் குறை கூறியிருந்தார். அந்த விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்றும் தென்கொரியாவுடன் சேர்ந்து மலேசியா எதையோ மறைக்கிறது என்றும் திரு காங் கூறியிருந்தார். அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு கேட்க திரு காங் தவறியதைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து அவர் வெளியேற மலேசியா காலக்கெடு விதித்தது. நேற்று வடகொரியா புறப்படுவதற்கு முன்பு கோலாலம்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு காங், மலேசியாவின் இத்தகைய கடின நடவடிக்கை குறித்து தமது கவலையை வெளிப்படுத்தினார்.