மணிலா: அபு சாயஃப் பயங்கரவாத அமைப்பால் ஏறத்தாழ எட்டு மாதங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட இரு மலேசியர்களை பிலிப்பீன்ஸ் ராணுவப் படை பத்திரமாக மீட்டுள்ளது. 45 வயது திரு தயுதீன் அன்ஜுட், 62 வயது திரு அப்துரஹிம் பின் சுமாஸ் ஆகிய இருவரையும் சாபாவின் லஹாட் டத்துவுக்கு அருகில் இருக்கும் கடற்பகுதி யிலிருந்து அபு சாயஃப் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ஆம் தேதியன்று கடத்தினர். அவர்களை விடுவிக்க 100 மில்லியன் பெசோ (2.8 மில்லியன் வெள்ளி) பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை பிலிப்பீன்ஸின் சூலு மாநிலத்தில் கிட்டத்தட்ட 30 அபு சாயஃப் பயங்கர வாதிகளுக்கு எதிராகத் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அங்குள்ள சதுப்பு நிலங்களில் அந்த இரண்டு மலேசியப் பிணைக் கைதிகளை அந்நாட்டு ராணுவ வீரர்கள் கண்டுபிடித்தனர்.
காப்பாற்றப்பட்ட மலேசியர்கள். படம்: ஏஎஃப்பி