ஹனோய்: வியட்னாமில் ஹனோய் நகருக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் நிலத் தகராறு தொடர்பில் அந்த கிராம மக்கள், அதிகாரிகள் பலரைப் பிணைப்பிடித்து வைத்திருந்தனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியிருந்த 20 அதிகாரிகளை கிராம மக்கள் நேற்று விடுவித்தனர். டோங் டாம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சென்ற வாரம் அந்த கிராமத்திற்கு வந்திருந்த போலிஸ் அதிகாரிகள் உள்பட 38 அதிகாரிகளை சிறைப் பிடித்தனர்.
அவர்களில் 15 பேர் கடந்த திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டனர். மூன்று பேர் தப்பிச் சென்றனர். இந்நிலையில் 20 பேர் கிராம மக்கள் பிடியில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்க உயர் அதிகாரிகள் யாரேனும் முயற்சி மேற்கொண்டால் அவர்கள் தங்கியுள்ள வீட்டைக் கொளுத்தப்போவதாகவும் கிராம மக்கள் எச்சரித்திருந்தனர். இந்நிலையில் நேற்று அந்த 20 அதிகாரி களையும் கிராம மக்கள் விடுவித்துள்ளனர். தங்கள் குடியிருப்பு நிலத்தை தொலைத்தொடர்பு திட்டத்திற்காக பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கு போதிய அளவு இழப்பீடு தர சம்மதித்ததால் தாங்கள் அந்த அதிகாரிகளை விடுவித்ததாக அந்த கிராம மக்கள் கூறினர்.
கடந்த ஒரு வார காலமாக கிராம மக்களிடம் சிக்கியிருந்த 20 போலிஸ் அதிகாரிகள் நேற்று விடுவிக்கப்பட்டதும் அங்கிருந்து செல்கின்றனர். நிலத் தகராறு காரணமாக அதிகாரிகள் பலரைக் கிராம மக்கள் சிறைப்பிடித்து வைத்திருந்தனர். படம்: ஏஎஃப்பி