வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் மிக அவசியமானது, அதற்கான பணத்தை மெக்சிகோ ஏதாவது வழியில் கொடுக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவரது அலுவலகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத் திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா, மெக்சிகோ எல்லையில் அமைக்கப்படவுள்ள தடுப்புச் சுவருக்கான நிதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில், "அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்புவது என்பது மிக அவசியமானது.
எல்லைச் சுவர் அமைவதற்கான நிதியை மெக்சிகோ அளிக்க மறுத்தாலும் ஏதேனும் ஒருவகையில் மெக்சிகோ அந்த நிதியை கொடுத்தே தீரும்" என்று பதிவிட்டுள்ளார். மெக்சிகோயில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இவர்களைத் தடுக்க எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்பப்படும் என்று டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கான ஒப்பந்தங்களில் ஜனவரி மாதம் அவர் கையெழுத்திட்டார். அமெரிக்கா-மெக்சிகோ எல்லைத் தடுப்புச் சுவர் விவகாரத்தால் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.