சோல்: தென்கொரியாவில் நடந்த அதிபர் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் திரு மூன் ஜே, நேற்று நாடாளுமன்ற அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் நலிவடைந்துள்ள பொருளியலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்லவிருப்பதாகவும் உறுதியளித்தார்.
தகுந்த சூழல் இருந்தால் வடகொரியாவுக்குச் செல்ல தாம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், வாஷிங்டன், பெய்ஜிங் செல்லவும் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். "அனைத்து மக்களுக்கும் நான் அதிபராக இருப்பேன். நாட்டின் பாதுகாப்புக் குறித்த விவகாரத்தில் உங்களது கருத்துகளைக் கேட்க விரும்புகிறேன். உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.