மணிலா: பிலிப்பீன்சின் மராவி நகரில் போராளிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே சண்டை நீடிக்கும் வேளையில் போராளிகளில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என்று ராணுவம் கூறுகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த நான்கு வாரங்களாக அங்கு கடும் சண்டை நீடிக்கிறது. சண்டைக்குப் பயந்து அங்கிருந்து தப்பிச் செல்லும் மக்களோடு மக்களாக போராளிகளில் சிலர் தப்பிச் சென்றிருக்கலாம் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். மராவி நகருக்குள் ஊடுருவியுள்ள போராளிகளை துடைத்தொழிக்க ராணுவம் கடுமையாகச் சண்டையிட்டு வருகிறது.
போராளிகள் வசம் உள்ள பகுதியில் ராணுவம் முன்னேறிச் சென்ற போதிலும் போராளிகளின் கடும் எதிர்ப்பை ராணுவ வீரர்கள் சந்தித்து வருகின்றனர். மராவி நகருக்குள் இன்னும் 200 போராளிகள் இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் தீவிரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். சில வெளிநாட்டுப் போராளிகளும் அவர்களுக்கு உதவி வருவதாகவும் ராணுவம் கூறியது. பொதுமக்களில் சிலரை போராளிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மராவியில் நீடிக்கும் சண்டையில் இதுவரை 300 பேர் கொல்லப்பட்டனர்.