வாஷிங்டன்: அமெரிக்க கடற் படைக் கப்பல் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் வணிகச் சரக்கு கப்பலுடன் மோதியதில் மூவர் காயமடைந்ததாகவும் அமெரிக்க கப்பலில் இருந்த 7 வீரர்களைக் காணவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிட்ஸ் ஜெரால்டு என்ற நாசகாரி கப்பலின் உயர் அதிகாரி ஒருவரும் காயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்த அமெரிக்கக் கப்பல் சனிக்கிழமை ஜப்பானின் யோகோசுகா பகுதியில் தென் மேற்கில் 104 கிலோ மீட்டர் தொலைவில் வந்தபோது எதிரே வந்த ACX கிரிஸ்டல் என்ற சரக்குக் கப்பலுடன் மோதியது. பிட்ஜ்ஜெரால்டு எனும் அமெரிக்க போர்க் கப்பல் மிகவும் அதி நவீன தொழில்நுட்ப வசதி கொண்டது. இதில் அதிக சக்தி வாய்ந்த ரேடார் கருவிகள் உள்ளன. இவ்வளவு வசதிகள் இருந்தும் கப்பல் சிப்பந்திகள் விபத்தைத் தடுக்க ஏன் தவறினார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அந்த விபத்தில் அமெரிக்கக் கப்பல் அதிக சேதம் அடைந்தது. ஏனெனில் அமெரிக்கக் கப்பலை விட அந்த சரக்குக் கப்பலின் எடை அதிகமாக இருந்தது.
ஜப்பான் கடல் பகுதியில் அமெரிக்க நாசகாரி கப்பலும் வணிகச் சரக்குக் கப்பலும் மோதியதில் அமெரிக்கக் கப்பல் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மூவர் காயம் அடைந்தனர், அமெரிக்க வீரர்கள் 7 பேரைக் காணவில்லை. காணாமற்போனவர்களைத் தேடும் பணி தொடர்கிறது. படம்: ஏஎஃப்பி