டெய்ஸி: சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள மலையடிவாரக் கிராமம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரோடு புதைந்தனர் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை நிலச்சரிவுக்குப் பத்து பேர் பலியாகிவிட்டனர் என்று அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி நேற்று மும்முரமாகத் தொடர்ந்தது. ஏராளமான மீட்புப் படை ஊழியர்கள் பாறைகளைக் குடைந்தும் நிலத்தைத் தோண்டியும் காணாமல் போனவர்களைத் தேடினர்.
உயிரோடு புதைந்தவர்களை மீட்கும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டன. ஆனால் இனி யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்பதை அறிந்த உறவினர்கள் பலர் நம்பிக்கையிழந்து காணப்பட்டனர். சனிக்கிழமை அன்று பெய்த கனமழை காரணமாக பாறைகள் சரிந்ததில் மலைக்கிராமம் மூழ்கியது. இதில் 62க்கும் மேற்பட்ட வீடுகள் புதைந்துவிட்டன்.
மூவர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர் என்றும் அவர்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரோடு எவரையும் மீட்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக அதிகாரபூர்வ ஊடகமான சின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியது.