கோலாலம்பூர்: மலேசியாவில் ஓராண்டுக்கு முன்பு நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் காயமடைந்த ஒரு மலேசிய மாது அந்த துயர அனுபவத்தை நினைவு கூர்ந்தார். 33 வயதான திருமதி எம். பவானி என்ற மாது ஓராண்டு ஆகியும் அந்த துயரத்தை தம்மால் மறக்கமுடியவில்லை என்று கூறியுள்ளார். மலேசிய இணையப்பக்கம் ஒன்றில் அவர் தனது சோகக் கதையைக் கூறியிருக்கிறார். மலேசியாவில் நோவிடா இரவு விடுதியில் பயங்கரவாதிகள் 2016ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 8 பேர் காயம் அடைந்தனர். மலேசியாவில் நடத்தப்பட்ட முதல் பயங்கரவாதத் தாக்குதல் அது என்று கூறப்பட்டது.
அத்தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் ஒருவர் திருமதி பவானி. இரண்டாம் ஆண்டு திருமண நிறைவைக் கொண்டாடுவதற்காக அவர் தன் கணவர் எஸ். ஜெயசீலனுடன் அந்த இரவு விடுதிக்குச் சென்றிருந்தாராம். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த விடுதி மீது கையெறி குண்டுகளை வீசியதில் திருமதி பவானிக்கு கையிலும் அவரது கணவருக்கு காலிலும் காயம் ஏற்பட்டது. கையிலிருந்து ரத்தம் கொட்டியதாகக் கூறிய திருமதி பவானி, அதை நினைத்தால் இப்போதும் தனக்கு வேதனையாக இருக்கிறது என்று கூறினார். தனது வலது கையில் 17 தையல்கள் போடப்பட்டதாகவும் நல்லவேளையாக கைவிரல்களை இழக்கவில்லை என்றும் அவர் சொன்னார். அந்த நேரத்தில் தன் தாயார் தனக்கு உதவியாக இருந்ததாகவும் அவர் சொன்னார். அத்தாக்குதலுக்கு காரணமான மலேசிய பயங்கரவாதி முகம்மது வாண்டி கடந்த ஏப்ரல் மாதம் சிரியாவில் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.