சிட்னி: ஆஸ்திரேலியாவிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட ஏர்ஏஷியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பிரிஸ்பன் நகருக்கு திரும்ப நேர்ந்தது. 'பறவைகளின் போராட்டம்' அதற்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கோல்ட் கோஸ்ட்டிலிருந்து 359 பேருடன் ஏர்ஏஷியா விமானம் ஒன்று திங்கட்கிழமை புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் பெரும் சத்தத்தைக் கேட்டதாகவும் விமானத்தின் என்ஜினிலிருந்து தீப்பொறி வருவதைப் பார்த்ததாகவும் அந்த விமானத்தில் சென்ற பயணிகள் கூறினர்.
அந்த விமானம் ஆட்டம் கண்டதாகவும் ஒரு சிலர் கூறினர். அதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக அந்த விமானத்தை பிரிஸ்பனுக்கு திருப்பினார். ஓடுபாதையில் இரு பறவைகள் காணப்பட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்தது. இயந்திரக் கோளாறு காரணமாக சென்ற வாரம் ஏர்ஏஷியா விமானம் ஒன்று பெர்த் நகருக்கு திரும்பியது. இம்மாதத் தொடக்கத்தில் விமான என்ஜின் பகுதியில் ஏற்பட்ட பெரிய ஓட்டை காரணமாக சீன விமானம் ஒன்று சிட்னியில் அவசரமாகத் தரை இறங்கியது.