வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், மக்களுக்கு மன்னிப்பு வழங்க தமக்கு "முழு அதிகாரம்" உள்ளது என்று கூறியுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அதிபர் மன்னிப்பு வழங்குவது குறித்து திரு டிரம்ப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள வேளையில் திரு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
தன்னைத்தானே மன்னித்துக்கொள்வது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரது இக்கூற்று மிகவும் வருந்துததற்குரிய ஒன்று என்று ஜனநாயகக் கட்சிப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சென்ற ஆண்டு நடந்த தேர்தலின் முடிவை மாற்றும் நோக்கத்தில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறி வருகின்றனர்.
தேர்தலில் திரு டிரம்ப்பை வெற்றி பெறச்செய்ய ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகளும் டிரம்ப் குழுவினரும் கூட்டாக சதி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது. கூட்டு சதி எதுவும் இல்லை என்று திரு டிரம்ப் கூறி வருகிறார்.