பெய்ஜிங்: சோங்சிங் பகுதியில் இருக்கும் பாலம் ஒன்றின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக தனிமையில் வசித்துவரும் திரு வாங் செங்ஷெள, 49, லாட்டரி சீட்டில் வெற்றிபெறும் எண்களைக் கண்டறிவதற்கான வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்தது. அன்றாடச் செலவுகளுக்காக தபால் நிலையத்திலும் துப்புரவாளராகவும் அவர் வேலை செய்தது தெரியவந்துள்ளது.
2008ஆம் ஆண்டு குடும்பத்தை விட்டு வெளியேறிய திரு வாங் எங்கிருக்கிறார் என்ற செய்தி அண்மைய ஊடகச் செய்தி வெளியாகும் வரை அவரது குடும்பத்தாருக்கு தெரியவில்லை. லாட்டரி சீட்டில் மாதந்தோறும் $400 செலவிடும் வாங், தமது ஆராய்ச்சியில் வெற்றி கிடைக்கும் வரை வீடு திரும்பப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தமது ஆராய்ச்சியின் அடிப்படையில் நான்கு புத்தகங்களை எழுதப் போவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அதிர்ஷ்டக் குலுக்குகளில் வெற்றி எண்கள் தற்செயலாக எடுக்கப்படுவதாகவும் அதற்கான சூத்திரத்தைக் கண்டறிவது சாத்தியமற்றது என்றும் சீச்சுவான் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஷெள டி கூறியுள்ளார்.