'இசிஆர்எல்' எனப்படும் கிழக்குக் கரை ரயில் திட்டத்திற்கான செலவைக் குறைக்க சீனா முற்பட்டபோதும் மலேசிய அமைச்சர்களின் முரணான கருத்துகளால் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கேள்விக்குறியாக இருப்பதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
ரயில் பாதை கட்டுமானத் திட்டத்தின் மதிப்பு மொத்தம் 67 பில்லியன் ரிங்கிட் (22 பில்லியன் வெள்ளி). இதனைப் பாதிவரை குறைக்க சீனக் குத்தகை நிறுவனம் 'சிசிசி' முற்பட்டதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக்கின் தலைமையிலான அரசாங்கம், 'சிசிசி'யுடன் ரயில் திட்ட ஒப்பந்தத்தில் இணைந்தது. கடந்தாண்டு மே மாதம் டாக்டர் மகாதீர் முகம்மது மலேசியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, இந்த ஒப்பந்தம் நியாயமற்றது எனக்கூறி அதனை ஜூலையில் தற்காலிமாக ரத்து செய்தார்.
ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவது குறித்து தாம் சீனாவின் புரிதலை நாடுவதாக டாக்டர் மகாதீர் செவ்வாய்க்கிழமை கூறினார். ஆனால் இதற்கு அடுத்த நாள், சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மலேசியா விரும்புவதாக மலேசிய நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் பல மலேசிய அதிகாரிகள் தலையிட்டு தத்தம் கருத்துகளை வெளிப்படுத்தியதால் பேச்சுவார்த்தைகள் இன்னும் சிக்கலாகியுள்ளதாக அந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்த சிலர் மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.