மர மனிதன் என்று அழைக்கப்படும் 28 வயது பங்ளாதேஷ் ஆடவர் திரு அப்தூல் பாஜேந்தர், கை வலி தாங்காமல் தனது கைகளைத் துண்டிக்க முடிவெடுத்துள்ளார். இவரது கை, கால்களின் சில சருமப் பகுதிகள் மரப் பட்டைகளைப் போல காணப்படுகின்றன. இந்த அரிய தோல் வியாதியால் கைகளில் ஏற்படும் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவர், அறுவை சிகிச்சை வழி தனது கைகளைத் துண்டிக்க முடிவு செய்துள்ளதாக நேற்று குறிப்பிட்டார்.
‘எபிடர்மோடிஸ்பிளேஸியா வெருசிஃபோர்மிஸ்’ (epidermodysplasia verruciformis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்ட அவர், தமது உடலில் முளைத்துள்ள அசாதாரணமான துளைகளை அகற்ற 2016ஆம் ஆண்டிலிருந்து சுமார் 25 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.
ஜனவரி மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்தூல் பாஜேந்தர், அயல் நாட்டிற்குச் சென்று தனது நோயைப் பூரணமாகக் குணப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் பணப் பற்றாக்குறையால் அவரால் தற்போதைக்கு அவ்வாறு செய்ய முடியவில்லை.
‘டாக்கா மெடிகல் காலேஜ்’ மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவர் (plastic surgeon) சமந்தா லால் சேன், ஏழு மருத்துவர்கள் கொண்ட குழு அவரது நிலைமையைப் பற்றி கலந்தாலோசித்து வருவதாகக் கூறினார்.
அவரது நிலைமை தேசிய, அனைத்துலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவருக்கு இலவச மருத்துவச் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்து தரப்படும் என பிரதமர் ஷேக் ஹசினா உறுதியளித்துள்ளார்.