கோலாலம்பூர்: மலேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்கக் கோரும் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று நீதிமன்ற விசாரணையை ஒத்திவைப்பதில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தார்.
நஜிப்பின் முதன்மை வழக்கறிஞர் முகம்மது ஷஃபீ அப்துல்லா அளித்த விண்ணப்பத்தை நீதிபதி முகம்மது நஸ்லான் முகம்மது கஸாலி தள்ளுபடி செய்தார். இந்த மசோதா மிகவும் முகியமானதாக இருப்பதால் தமது கட்சிக்காரர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொள்வது முக்கியம் என்று நீதி மன்றத்தில் திரு ஷஃபீ வாதிட்டார்.
முன்னதாக, கர்பால் சிங் மற்றும் பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் திரு ஷஃபீ சுட்டிக் காட்டினார்.
ஆயினும், நஜிப்பின் அந்த விண்ணப்பத்தை எதிர்த்து தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமஸ் வாதிட்டார். நஜிப்பின் இந்தக் கோரிக்கையை அற்பமான விண்ணப்பம் என்று அவர் வர்ணித்தார்.
இரு தரப்பினரிடம் இருந்தும் வாதங்களைக் கேட்ட பின், விண்ணப்பத்தை நீதிபதி நஸ்லான் நிராகரித்தார்.

