பாலியல் காணொளியை வெளியிட்ட சதிகாரர்கள், அவர்களின் இலக்கை அடைய தான் ஒரு பொழுதும் உதவப் போவதில்லை என்று நேற்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தம் தனிப்பட்ட வலைப் பதிவில் வன்மையாகக் கருத்து கூறியுள்ளார்.
மலேசிய பொருளியல் விவகாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலி தொடர்பிலான பாலியல் காணொளி சமூக ஊடகங்களில் பரவிவர, அதை வெளியிட்டது ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும் தான் ஏதேனும் ஒரு எதிர் நடவடிக்கை எடுத்தால் காணொளியை வெளியிட்டவர்கள் தங்கள் நோக்கத்தை அடைவதாக இருந்துவிடும் என்றும் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
இரு ஆண்கள் பாலியல் செயலில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளிகளை இவ்வாறு வெளியிட்டது, குறிப்பிட்ட ஒருவரின் முன்னேற்றத்தைத் தடைசெய்யும் நோக்கில் செய்யப்பட்டதாகவும் மகாதீர் முகம்மது தமது வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
“குறிவைத்தவர் பதவியிலிருந்து அகற்றப்படுவார் என்ற எண்ணத்தில் காணொளிகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு அகற்றும் அதிகாரம் பதவியில் இருக்கும் எனக்கு உண்டு. ஆனால் நான் இந்த ஆட்டத்திற்கு வரமாட்டேன். அதிலும் தீய நோக்கம் கொண்டு நெறியற்ற அரசியலில் ஈடுபடும் சதிகாரர்களின் செயலுக்கு நான் அடங்கமாட்டேன்,” என்றார் அவர்.
டாக்டர் மகாதீர் யார் பெயரையும் வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் அமைச்சரவையில் அஸ்மினின் பதவிக்கு ஆபத்து வராது என்பதற்கு உறுதி கூறுவதாக அவரது பேச்சு உள்ளது எனக் கூறப்படுகிறது.
“நான் அஸ்மின்னுக்காக பரிந்து பேசவில்லை. ஆனால் நெறியற்ற அரசியலில் நான் ஓர் அங்கமாக மாட்டேன்,” என்றார் டாக்டர் மகாதீர். வலைப்பதிவில் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்த திரு மகாதீர், பின் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்நிலையில், துணைப் பிரதமர் வான் அஸிஸா பாலியல் காணொளி தொடர்பான விசாரணையில் போலிசுடன் ஒத்துழைக்குமாறு அஸ்மின் அலியையும் சிலாங்கூர் முதலமைச்சர் அமிருடின் ஷாரியையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே அடுத்த மலேசிய பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படும் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி நடப்பதாக திரு அன்வாரின் அரசு செயலாளர் ஃபர்ஹாஷ் முபாரக் நேற்று கூறினார்.
சிறைக்காவலில் எட்டு நாட்களாக இருந்த திரு ஃபர்ஹாஷ், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
“தற்போது நடக்கும் அரசியல் சூழ்ச்சி அன்வார் இப்ராஹிமுக்கு எதிரானது. முடிந்தால் அஸ்மின் அலியை விசாரணை செய்யுங்கள்,” என்று போலிஸ் தலைவர் அப்துல் ஹமீது படொருக்கு அவர் சவால் விடுத்தார்.