தமக்கு அடுத்து மலேசியப் பிரதமராகப் பதவியேற்கப்போவது திரு அன்வார் இப்ராஹிம் என்று டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்தபோதும் அவர் தொடர்ந்து பிரதமராக நீடிக்கவேண்டும் என்று அந்நாட்டின் எதிர்க்கட்சியினரில் சிலர் விரும்புவதாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
டாக்டர் மகாதீர், அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்பே பதவி விலகி அதனைத் திரு அன்வாரிடம் ஒப்படைப்பாரா என்பது அண்மையில் கேள்விக்குறியாக இருந்து வந்தது. குறிப்பாக, மலேசிய பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ள ஓரின பாலியல் காணொளியால் அவரது ஆதரவாளர்களுக்கும் திரு அன்வாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஆயினும் டாக்டர் மகாதீர், தமது வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றப்போவதாக துருக்கிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.
அம்னோ-பாஸ் ஒப்பந்ததின் உறுப்பினர்கள் சிலர் இது குறித்து டாக்டர் மகாதீரைச் சந்தித்தனர். மூன்று மணி நேரம் நீடித்த அந்தச் சந்திப்பின்போது, அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னர் வேறொருவர் பிரதமராகப் பொறுப்பேற்பதைத் தாங்கள் விரும்பவில்லை என்று அந்தப் பிரதிநிதிகள் அவரிடம் தெரிவித்ததாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.