வாஷிங்டன்: பெய்ஜிங்: ஜப்பான் மற்றும் தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று சீனாவில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜப்பான், தென்கொரிய நாடுகளின் உறவு இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமடைந்து வரும் நிலையில், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோ, தென் கொரிய வெளியுறவு அமைச்சர் காங் கியுங் வாவும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இச்சந்திப்பை மேற்கொண்டனர். தோக்கியோ, சோலுக்கு இடையிலான உறவு மோசமடைந்து வருவதால், அது வட்டார பொருளியலின் நிலைத்தன்மையை அச்சுறுத்தும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பிற்குப் பிறகு பேசிய சீன வெளியிறவு அமைச்சர் வாங் யீ, ஜப்பானும் தென்கொரியாவும் தங்களுக்கு இடையில் உள்ள வேற்றுமைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தடையற்ற வர்த்தகத்தையும் வட்டார பொருளியல் வளர்ச்சியைப் பேணுவதற்காகவும் இணைந்து செயல்பட வட ஆசிய நாடுகள் உறுதிபூண்டுள்ளதாக வாங் யீ கூறினார்.இவ்வாண்டு இறுதிக்குள் தங்களுக்கிடையில் தடையற்ற வர்த்தக மண்டலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதில் தங்களது பொறுப்பை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
“உலகப் பொருளாதாரம் கீழ்நோக்கிச் செல்லும்போது, மூன்று முக்கிய பொருளியல் நாடுகளான சீனா, ஜப்பான், தென்கொரியா ஒன்றிணைந்து செயல்பட்டு பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, தடையற்ற வர்த்தக முறையை நிலைநிறுத்தவும் முடியும்.
“உலகளாவிய வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் நலனுக்காக திறந்த பொருளாதாரத்தை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று ஜப்பான், தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் உடனிருக்க சீன அமைச்சர் வாங் கூறினார்.
இருதரப்பு ஒத்துழைப்பில் உரசல் ஏற்பட்டாலும்கூட தங்களுக்கு இடையிலான முத்தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஜப்பான் அமைச்சர் தென்கொரியாவுக்கும் சீனாவிற்கும் அழைப்பு விடுத்தார். ஆனால், தென்கொரிய அமைச்சரோ, ஜப்பான் தங்கள் நாட்டிற்கான ஏற்றுமதிகளைக் கடுமையாக்குவது குறித்துப் பேசினார்.
இச்சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர், “முத்தரப்பு சந்திப்பில் இரு தரப்பு பிரச்சினைகள் குறித்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும் ,” என்று ஜப்பான் அமைச்சர் கோனோ கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.
இதற்கிடையே, இறக்குமதி செய்யப்படும் ஜப்பான் உணவுகள் மீதான கதிரியக்க சோதனையின் அலைவரிசையை வரும் 23ஆம் தேதி முதல் இரட்டிப்பாக்கப் போவதாகத் தென்கொரியாவின் உணவு, மருந்து பாதுகாப்பு அமைச்சு நேற்று கூறியது இரு நாட்டு உறவில் பதற்றத்தை மேலும் அதிகரித்து உள்ளது.