இந்தோனீசியாவின் பனைத்தோட்டங்களில் எரியும் தீயிலிருந்து கிளம்பும் புகைமூட்டம் குறித்து மலேசியர்கள் சமூக ஊடகங்களில் புலம்பி வருகின்றனர். வறண்ட பருவத்தில் பனைமரம், பேப்பர் மரம் உள்ளிட்டவற்றை வளர்ப்பதற்கு இந்தோனீசியாவில் காட்டு மரங்கள் தீயில் இடப்படுகின்றன. இந்தத் தீயிலிருந்து வெளிவரும் புகையைத் தெற்கிலிருந்து வீசும் காற்று சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தள்ளுவதால் அவற்றின் மக்கள் பல்வேறு விதமான சுகாதாரப் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
புகைமூட்டத்தால் தங்களுக்குத் தோல் அரிப்பு, தொண்டை வலி, சளி ஆகியவை ஏற்படுவதாக மலேசியர்கள் சிலர் டுவிட்டரில் கூறுகின்றனர்.மலேசியாவிலுள்ள எட்டு மாநிலங்களில் 21 இடங்களின் காற்றுத்தரம் சுகாதாரத்திற்குக் கெடுதலான அளவிற்கு எட்டியுள்ளதாக அந்நாட்டின் காற்றுத்தரக் குறியீடு காட்டுகிறது.
கடந்த சில வாரங்களாக, சுமத்ரா மற்றும் போர்னியோ தீவுகளில் ஏற்பட்ட அவசரநிலையின் காரணமாக இந்தோனீசியா ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரை அனுப்பி தீயை அணைத்துள்ளது. இருப்பினும், இந்தப் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை.
இந்தோனீசியாவின் அண்டை நாடுகள் பல தடவை முறையிட்டபோதும் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகப் பலமுறை உறுதி கூறி ஒவ்வொரு முறையும் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறுகிறது இந்தோனீசியா.