அணுவாயுதக் களைவு குறித்து பேச வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னை மீண்டும் சந்திக்கத் தாம் தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இம்மாதப் பிற்பகுதிக்குள் அமெரிக்காவுடன் மறுபடியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தயார் என்று வடகொரியா இவ்வாரம் திங்கட்கிழமை கூறியதை அடுத்து திரு டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டிரம்ப்பும் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். அதன் பிறகு அவர்கள் மேலும் இரண்டு முறை சந்தித்துள்ளனர். எந்தப் பேச்சுவார்த்தையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இதுவரையில் ஏற்படவில்லை.
இஸ்ரேலைச் சந்தேகிக்க மறுப்பு
இதற்கிடையே, தம் நாட்டின் மீது இஸ்ரேல் உளவு பார்ப்பதாக தாம் நம்பவில்லை என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். வெள்ளை மாளிகைக்கு அருகிலும் வாஷிங்டன் நகரின் சில பகுதிகளிலும் கைத்தொலைபேசி கண்காணிப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஊடக அறிக்கை ஒன்று தெரிவித்தது.
‘ஸ்திங்ரேஸ்’ என்ற அந்தக் கருவிகள் இஸ்ரேலுடன் தொடர்புடையவையாக இருக்கக்கூடும் என்று ‘பொலிட்டிகோ’ செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது.