ஹாங்காங்கில் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ள அதன் மக்கள், நியாயம் கேட்க பிரிட்டனின் பக்கம் திரும்பியுள்ளனர்.
ஹாங்காங்கிலுள்ள பிரிட்டிஷ் துணைத் தூதரகத்தை அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு பிரிட்டிஷ் கொடிகளையும் பதாகைகளையும் பிடித்துக்கொண்டவண்ணம் அந்நாட்டின் தேசிய கீதத்தைப் பாடினர்.
முன்னதாக பிரிட்டனின் காலனியாக இருந்த ஹாங்காங், 1997 ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஒப்படைக்கப்பட்டது. ஹாங்காங் மக்களுக்கென சில தனித்தன்மையான உரிமைகளை உறுதி செய்யும் ‘ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்’ என்ற முறையைச் செயல்படுத்தும் சீன-பிரிட்டிஷ் ஒன்றிணைந்த அறிவிப்பு ஒப்பந்ததை 1984ஆம் ஆண்டில் பிரிட்டனும் சீனாவும் கையெழுத்திட்டன.
ஆனால் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் கட்டிக்காக்கப்படவில்லை என்று இப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஹாங்காங் மக்களின் உரிமைகள் பறிபோவதற்கு பிரிட்டன் பொறுப்பேற்கவேண்டும் என்றும் அந்நாடு இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கோரி வருகின்றனர்.
குற்றவாளிகளை சீனாவுக்கு நாடுகடத்தும் சட்டம் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிராகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆர்ப்பாட்டங்கள் தொடங்கப்பட்டன. இப்போது அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காகப் பொதுவான ஆர்ப்பாட்டமாக இதனை விரிவு செய்துள்ளது.