வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், வெள்ளைக் குதிரையில் பவனி வருவதைக் காட்டும் படம் ஒன்றை அந்நாட்டின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கேசிஎன்ஏ அரசு ஊடகம் வெளியிட்ட அந்தப் படங்கள், பயேக்டு (Paektu) பனிமலைகளுக்கு இடையே திரு கிம் தனியாக வெள்ளைக்குதிரையில் செல்வதைக் காட்டுகின்றன.
“கொரியப் புரட்சியின் வரலாற்றில் பயேக்டு மலையில் அவர் வெண்புரவி மீது செல்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அந்த மலை மீது அவர் சிந்திக்கும் அரிய நிகழ்வைக் கண்ட அவருடன் இருந்த அதிகாரிகள், உலகை வியக்கவைக்கும் நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் அது கொரியப் புரட்சியின் அடுத்த படிக்கு இட்டுச் செல்லும் என்றும் இன்பம் ததும்பப் புரிந்துகொண்டனர்,” என அரசு ஊடக நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்தது.
வடகொரியாவில் கொள்கை ரீதியான முக்கிய முயற்சிகளின்போது திரு கிம் பலமுறை அந்த மலைகளுக்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.
அணுவாயுதக் களைவு குறித்து அனைத்துலகச் சமூகம் கொடுக்கும் நெருக்குதலுக்கு அடிபணியப்போவதில்லை என்று இந்தப் படத்தின்மூலம் வடகொரியா காட்டுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.