கோலாலம்பூர்: பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த நினைப்பவர்கள் முயற்சி செய்து பார்க்கட்டும் என்று பக்கத்தான் ஹரப்பானின் தலைவரும் மலேசிய பிரதமருமான மகாதீர் முகம்மது சவால் விட்டுள்ளார்.
பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஜனநாயக செயல் கட்சியையும் அமானா நெகாரா கட்சியையும் கூட்டணியிலிருந்து வெளியேற்ற அம்னோவின் முன்னாள் துணைத் தலைவர் ஹிஷாமுதீன் ஹுசேன் பலமுறை முயற்சிகள் செய்துள்ளதாக பக்கத்தான் ஹரப்பானின் செயலவை தெரிவித்ததன் தொடர்பில் இவ்வாறு டாக்டர் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார்.
ஓர் ஏளனச் சிரிப்புடன் “முயற்சி செய்து பார்க்கட்டும். நான் இன்னும் ஹிஷமுதீனைச் சந்திக்கவில்லை,” என்றார் அவர்.
இதற்குமுன் கூட்டணியில் ஜனநாயக செயல் கட்சியும் அமானா கட்சியும் இடம்பெறும் என்று பக்கத்தான் ஹரப்பான் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.
கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் எந்த ஒரு பிரசாரத்திலும் ஈடுபடவேண்டாம் என்றும் பக்கத்தான் கேட்டுக்கொண்டது.
இனரீதியாக அரசியலையும் ஆளுமையையும் ஹிஷமுதீன் நோக்குவதாக இதுவரை வெளியாகியுள்ள பல்வேறு செய்திகளிலும் நேர்காணல்களிலும் தெரிவதாக செயலவை கூறியிருந்தது.
இதுவரை அனைவரையும் உள்ளடக்கிய அரசியலைத்தான் பக்கத்தான் வலியுறுத்தி வருகிறது என்றும் இனவாரியாக அரசியலை நோக்குவது காலங்கடந்த ஒரு முறை என்றும் செயலவை அதன் அறிக்கையில் கூறியது.
இதற்கிடையே ஜனநாயக செயல் கட்சியையும் அமானா நெகாரா கட்சியையும் ஓரங்கட்டும் வகையில் எந்த ஒரு கருத்தையும் தம் படைப்புகளில் குறிப்பிட்டதில்லை என்று நேற்று ஹிஷாமுதீன் கூறி மறுத்துள்ளார்.
அரசியல் தலைவர்களின் வழிகாட்டுதலுடன் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் பற்றி தமது சமூக வலைத்தள பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பதிவு செய்திருந்தார் ஹிஷாமுதீன்.