ஓமான் நாட்டில் மழை நீரில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த ஒருவர் உள்பட ஆறு இந்திய ஊழியர்கள் உயிரிழந்தனர்.
ஓமான் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் 50 அடி ஆழத்தில் மழைநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு இந்திய தொழிலாளர்கள் நீரில் மூழ்கி பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஓமான் நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அல் சீப் பகுதியில் மழைநீர் வெளியேறுவதற்கு வசதியாக நிலத்தடியில் ராட்சத கான்கிரீட் குழாய்கள் பதிக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
அங்கு சுரங்கம் அமைத்து கான்கிரீட் குழாய்களை நிலத்தடியில் பொருத்தும் பணியில் இரண்டு தனியார் நிறுவனங்கள் ஆறு இந்தியர்களைப் பணியமர்த்தின.
அவர்கள் அங்கு சுமார் 50 அடி ஆழத்தில் பதிக்கப்பட்டு இருந்த 1,000 அடி நீளமுள்ள ராட்சத குழாயின் உள்ளே இறங்கி குழாய்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வேளையில் அங்கு கனமழை பெய்யத் தொடங்கியது. மழைவெள்ளம் பெருக்கெடுத்து கான்கிரீட் குழாய்க்குள் நுழைந்தது.
குழாயில் இருந்து வெளியேற வழி இல்லாததால் ஆறு தொழிலாளர்களும் தண்ணீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.
இதில், மதுரையை சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயணா (22), பீமா ராஜு (30), பீகார் மாநிலத்தை சேர்ந்த சுனில் பார்த்தி (29), விஷ்வகர்மா மஞ்சி (29), உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விகாஷ் சவுகான் மஹாதேவ் (27) ஆகியோர் அந்த ஆறு பேரும் என்பது தெரியவந்துள்ளது.
இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் ஆறு பேரின் சடலங்களையும் விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பணியில் இருந்தபோது உயிரிழந்த அறுவரது குடும்பத்துக்கும் உரிய இழப்பீட்டை வழங்க ஓமான் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity