ஹனாவ்: ஜெர்மனியின் தென்மேற்கு நகரத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒருவன், அவனது வீட்டில் இறந்து கிடந்ததாக போலிசார் நேற்று தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பிராங்ஃபர்ட்டின் நிதி மையத்திற்கு கிழக்கே ஹனாவ் நகரில் உள்ள அந்த ஆடவனின் வீட்டில் இன்னோர் சடலமும் கண்டுபிடிக்கப்பட்டது.
“வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை,” என்று போலிசாரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “இறந்த இருவரில் ஒருவர் குற்றவாளியாக இருக்கக்கூடும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளியின் அடையாளம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், தப்பியோடிய பிறகு தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என்றும் ஆனால் தாக்குதலுக்கான காரணம் என்னவென்பது தெளிவாக தெரியவில்லை என்றும் போலிசார் கூறுகின்றனர்.
ஜெர்மனியின் ஹனாவ் நகரில் வியாழக்கிழமை இரவு இரு மதுபானக் கூடங்களில் நுழைந்த ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.
முதல் சம்பவம் மிட்நைட் மதுபானக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் நடந்ததாகவும் அதில் மூவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
பிறகு அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாகவும் போலிசார் கூறினர்.
அதன் பிறகு அரினா மதுபானக் கூடத்தில் நடந்த இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், ஐவர் பலியாகினர்.
இச்சம்பவங்களில் ஐந்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் மாண்டுவிட்ட நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.