டோஹா: கொரோனா கிருமிப் பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் மத்திய கிழக்கு நாடான கத்தாரும் ஒன்று.
அங்கு பலரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் வேலையிழந்து விட்டனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து அங்கு வேலைக்குச் சென்றிருந்தவர்களில் பலரும் தங்களது அன்றாட உணவுக்காகக் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக த கார்டியன் பிரிட்டிஷ் நாளிதழ் தெரிவித்து உள்ளது. 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களிடம் அந்நாளிதழின் செய்தியாளர் பேசினார்.
திடீரென வேலையிழந்துவிட்டதால் செய்வதறியாது அலைந்து கொண்டிருப்பதாகவும் சொந்த நாட்டுக்கும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் ஒவ்வொரு வேளை உணவுக்கும் தங்களது முன்னாள் முதலாளிகளையும் அறநிறுவனங்களையும் நம்பி இருப்பதாகவும் அவர்கள் கூறினர். அவர்களில் பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த அழகு நிலைய ஊழியர் ஒருவர், பசித்த வயிறுக்கு உணவளிக்க தமது முதலாளி மறுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.