பாரிஸ்: ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கொவிட்-19 நோயுடன் தொடர்புடைய கடுமையான நோய் எதிர்ப்பு கோளாறு சிறுவர்களிடையே கடந்த சில வாரங்களாக அதிகரித்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் மூன்று சிறுவர்கள், பிரான்சில் ஒரு பிள்ளை, பிரிட்டனில் ஒரு பிள்ளை என குறைந்தது ஐந்து சிறுவர்கள் இந்த நோய் எதிர்ப்பு கோளாறு காரணமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் இருவர் இதே நோயால் உயிரிழந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இதுநாள்வரை, கொவிட்-19 சிறுவர்களையும் பதின்ம வயதினரையும் பெரும்பாலும் விட்டுவைத்துள்ளது. ஆயினும், அறிகுறிகள் தென்படாமலேயே இந்நோய் அவர்களில் பலரைத் தொற்றியிருக்கும் எனக் கருதப்படுகிறது.
சிறுவர்களைப் பாதிக்கும் இந்தப் புதிய வகை அரிய நோயின் தாக்கத்திலிருந்து தற்போது எந்த வயதைச் சேர்ந்தவரும் தப்ப முடியாது என்பதை அது காட்டுவதாகக் கருதப்படுகிறது.
பிஎம்எஸ் எனப்படும் ‘பீடியேட்ரிக் இன்ஃபிளமேட்டரி மல்டி சிஸ்டம் சிண்ட்ரம்’ என்ற இந்த அழற்சி நோய் ஐரோப்பாவில் இதுவரை 14 வயது வரையிலான 230 சிறுவர்களைப் பாதித்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுவதாக ஐரோப்பிய நோய்த்தடுப்பு, கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இளம் பிள்ளைகளுக்கு இடையே கடுமையான அழற்சி நோய்ச் சம்பவங்களின் எண்ணிக்கை முப்பது மடங்கு அதிகரித்திருப்பதாக வட இத்தாலியின் பெர்காமோ நகரிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி நடுப்பகுதி முதல் ஏப்ரல் நடுப்பகுதி வரை 10 நோய்ச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒப்புநோக்க, கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுபோன்ற 19 கிருமித்தொற்று சம்பவங்கள் மட்டுமே பதிவாகி இருந்ததாக ‘தி லான்சட்’ அறிவியல் சஞ்சிகை குறிப்பிடுகிறது.
நியூயார்க்கில் 100க்கும் அதிகமாக நோய் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மர்ம நோய் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
“இந்நோய்க்கும் கொவிட்-19க்கும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற கருத்து முதற்கட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன,” என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதோனோம் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.