கொரோனா கிருமி பரவியதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் ஊரடங்கை நடைமுறைப்படுத்திய கையோடு, வெளிநாடுகளுக்கிடையிலான விமான சேவையையும் ரத்து செய்தன.
இதனால் வெளிநாடுகளுக்கு மருத்துவம் மற்றும் சுற்றுலா சென்றவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக்கொண்டனர். அந்த வகையில் இலங்கையில் 2,400க்கும் அதிகமான இந்தியர்கள் சிக்கிக் கொண்டதாகவும் அவர்கள் தாயகம் திரும்ப வழியின்றி தவிப்பதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு வெளிநாடுகளில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க இந்தியா ‘வந்தே பாரத் மிஷன்’ என்ற திட்டத்தை தொடங்கி பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இலங்கையில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க அத்தகைய சிறப்பு விமானம் எதுவும் இலங்கைக்கு அனுப்பப்படவில்லை என்றும் அதன் தொடர்பிலான தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அங்கிருக்கும் இந்தியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
“நான் கொழும்பு நகரில் இருக்கிறேன். கையில் இருக்கும் பணம் குறைந்து வருகிறது,” என்று நொய்டாவை சேர்ந்த பெண் பொறியாளர் வினிதா குறிப்பிட்டார்.
தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற விஜய் பால் சிங், “பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து விடுபட்டு, விடுமுறையை கழிப்பதற்காக குழந்தைகளை எங்களது பெற்றோரிடம் விட்டுவிட்டு நானும், எனது மனைவியும் இங்கு வந்தோம். நான்கு நாள் சுற்றுலாவுக்காக இங்கு வந்த நாங்கள் 2 மாதங்களாக சிக்கித் தவிக்கிறோம்,” என்றார்.
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்குச் சென்ற சதேந்திர மிஸ்ரா, “நாங்கள் ஒரு குழுவாக இங்கு இருக்கிறோம். இதுவரை இலங்கையில் இருந்து எங்களை வெளியேற்றுவதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை,” என்றார்.