வாஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் பல நாட்களாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் நல்ல தலைமையை வழங்க அதிபர் டிரம்ப் தவறிவிட்டார். அதோடு நாட்டையும் பிளவுபடுத்த முயற்சி செய்கிறார் என்று முன்னாள் தற்காப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக மீட்டுக் கொள்ள அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதில் டிரம்புக்கும் ஜேம்ஸ் மேட்டிசுக்கும் இைடயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் 2018 டிசம்பர் மாதம் தற்காப்பு அமைச்சர் பதவியிலிருந்து ஜேம்ஸ் மேட்டிஸ் விலகினார்.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமது முன்னாள் முதலாளி டிரம்ப் பற்றி ஜேம்ஸ் மேட்டிஸ் வாய் திறந்துள்ளார்.
“அமெரிக்காவை ஒற்றுமைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காத முதல் அதிபரை என்னுடைய வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். அதைச் செய்வதுபோலவும் அவர் காட்டிக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக நாட்டை பிளவுபடுத்த அவர் முயற்சி செய்கிறார்,” என்று ஜேம்ஸ் மேட்டிஸ் கூறியதாக த அட்லாண்டிக் இணையத் தளம் கூறியது.
ஓய்வுபெற்ற ஜெனரலான ஜேம்ஸ் மேட்டிஸ் இதற்கு முன்பு அதிபரை குறைகூறுவது முறையற்றது என்று கூறியிருந்தார்.
“ஒரு முதிர்ச்சியடைந்த தலைமைத்துவம் இல்லாமல் கடந்த மூன்று ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள விளைவுகளை கண்கூடாகப் பார்த்து வருகிறோம்,” என்றும் அவர் குைறகூறியிருந்தார்.
இதற்கிடையே முன்னாள் அதிபர் ஒபாமா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் இளையர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த மே 25ஆம் தேதி போலிசார் கட்டுப்பாட்டில் இருந்த ஜார்ஜ் ஃபுளோய்ட் இறந்ததால் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறை சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் முதல் முறையாக காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ஒபாமா, போலிசாருக்கு உள்ள அதிகாரங்களை மாநில, உள்ளூர் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த நிலையில் போலிசார் பிடியில் மரணமடைந்த ஜார்ஜ் ஃபுளோய்டுக்கு நேற்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
“கொவிட்-19 சமயத்திலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்,” என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த யூசோஃப் ஹுசேன் தெரிவித்தார்.
போலி 20 டாலர் நோட்டைக் கொடுத்து ஜார்ஜ் ஃபுளோய்ட் சிகரெட் வாங்கியதாக கடைக்காரர் ஒருவர் புகார் தெரிவித்ததால் சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் அவரை தரையில் தள்ளி கழுத்தின் மீது கால் முட்டியை வைத்து அழுத்திப் பிடித்தனர். அப்போது மூச்சுவிட முடியவில்லை என்று ஜார்ஜ் ஃபுளோய்ட் கூறிய பிறகும் போலிசார் விடுவிக்காததால் அவர் மரணமடைந்தார்.
இதையடுத்து மின்னசோட்டாவில் கலவரம் மூண்டது. போலிசார் வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன.
இந்தக் கலவரம் அடுத்தடுத்த நாட்களில் மற்ற மாநிலங்களுக்கும் பிரிட்டன் உட்பட மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.