வாஷிங்டன்: அமெரிக்காவின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் கொரோனா கிருமிப் பரவல் கட்டுக்கடங்காமல் போய்விட்டதாக வெள்ளை மாளிகை கொவிட்-19 நிபுணர்கள் கருத்துரைத்துள்ளனர்.
நாட்டின் சில பகுதிகளில் கிருமிப் பரவல் வெகுவாக அதிகரித்து வருவதாகவும் பொதுச் சுகாதார அதிகாரிகள் அந்தந்த மாநிலங்களின் தேவைகளுக்கேற்ப உதவிகளை வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
“மார்ச், ஏப்ரல் மாதங்களில் இருந்த சூழல் வேறு. இப்போது கொரோனா கிருமி கட்டுக்கடங்காமல் பரவியுள்ளது,” என டாக்டர் டெபோரா பிரிக்ஸ் குறிப்பிட்டார்.
வெள்ளை மாளிகை பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் பிரிக்ஸ், பல தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில், எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் வீட்டுக்குள்ளேயும் முகக்கவசம் அணிவது அவசியம் என்றார்.
முகக்கவசம் அணிவதை வலியுறுத்திய மற்றொரு அதிகாரியான அட்மிரல் பிரெட் கிரோயிர், “கூட்டமான உள்ளரங்குகளில் முகக்கவசம் அணியாவிடில் கிருமிப் பரவல் நீடிக்கும்,” என்று செய்தியாளர் கூட்டம் ஒன்றில் தெரிவித்தார்.
கொரோனா கிருமித்தொற்றால் அமெரிக்காவில் 4.6 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 155,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.