லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக இருந்தோரும் தற்போது எதிர்க்கத் தொடங்கிவிட்டனர். தங்கள் கருத்துகளை அவர் கேட்கத் தயாராக இல்லை என்று அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் குறைகூறுகின்றனர்.
பிரெக்சிட், கொவிட்-19 போன்ற விவகாரங்களால் ஏற்பட்டுள்ள கடுமையான சவால்களை எதிர்கொள்கிறார் திரு ஜான்சன். அவருக்கு ஏற்பட்டுள்ள சோதனை மோசமடையக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்காக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார் திரு ஜான்சன். அதன் பிறகு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் பதவியேற்றார்.
திரு ஜான்சன் பிரதமர் என்கிற முறையில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதற்காக கன்சர்வேட்டிவ் கட்சியினர் அவரைத் தங்கள் தலைவராகத் தேர்ந்தெடுக்கவில்லை. தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே திரு ஜான்சனை அவர்கள் தங்கள் தலைவராகத் தேர்வு செய்தனர். அவர் பிரதமரானதும் தமது பொறுப்புகளைத் திறம்படச் செய்வார் என்ற சிறு நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கும். ஆனால் அந்தக் கனவு நனவாகவில்லை. அதனால் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திரு கேர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜான்சனுக்கு எதிராக திரு ஸ்டார்மர் கேள்விக் கணைகளைத் தொடுத்து நெருக்குதல் அளித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் விடுக்கும் சவால்களைக் காட்டிலும் தமது சொந்த கன்சர்வேட்டிவ் கட்சியினரால் திரு ஜான்சனுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் ரிஷி சுனாக்தான் அடுத்த பிரதமர் என்ற பேச்சு எழுந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி 80 இடங்களுடன் பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால் கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அளிக்கப்படும் அவசரகால அதிகாரம் இவ்வாரம் புதுப்பிக்கப்பட இருக்கும்போது அக்கட்சியைச் சேரந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ஜான்சனுக்கு எதிராகச் செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
“பிரிட்டிஷ் பிரதமராக இருக்கும் தகுதியை திரு ஜான்சன் இழந்துவிட்டார். பிரெக்சிட் விவகாரம் முடிவடைந்ததும் அவர் பதவி விலக வேண்டும்,” என்று இதற்கு முன்பு திரு ஜான்சனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த திரு டோபி யங், ஸ்பெக்டேட்டர் சஞ்சிகையில் குறிப்பிட்டார்.