பென்சில்வேனியா: வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதியன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. அதில் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான திரு ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில் பென்சில்வேனியா மாநிலத்தில் பிரசாரம் செய்த அதிபர் டிரம்ப், ஜனநாயகக் கட்சி தேர்தல் மோசடியில் ஈடுபட்டால்தான் பென்சில்வேனியா மாநிலத்தைக் கைப்பற்ற முடியும் என்று கூறினார்.
தேர்தல் முடிவில் சர்ச்சை ஏற்பட்டால் அதிபரை அமெரிக்க நாடாளுமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் முடிவு செய்யலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் அது தமக்குத்தான் சாதகமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
“யார் அதிபராக வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் வரை போக எனக்கு விருப்பமில்லை. நாடாளுமன்றம் முடிவெடுத்தால் எனக்குத்தான் சாதகமாக அமையும்.
“இருப்பினும், நாடாளுமன்றம் முடிவெடுப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை,” என்று தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் கூறினார்.
நாடாளுமன்றத்தில் தமது குடியரசுக் கட்சியின் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையைக் கொண்டிருப்பதை அவர் சுட்டினார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதில் தாம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும் அதை ஏற்கப்போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியாக திருவாட்டி ஏமி கோனி பேரட்டை அதிபர் டிரம்ப் நியமித்துள்ளார். புதிய நியமனம் குறித்து வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் அறிவித்தபோது, திருவாட்டி பேரட் அவருடன் இருந்தார். திருவாட்டி பேரட் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்றும் அவர் அமெரிக்காவில் உள்ள மிகச் சிறந்த அறிவாளிகளில் ஒருவர் என்றும் அதிபர் டிரம்ப் பாராட்டினார்.