லண்டன்: இவ்வாண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு ஐநாவின் உலக உணவுத் திட்ட அமைப்புக்கு (WFP) கிடைத்துள்ளது. கொரோனா கொள்ளை நோய் பரவலால் பசியும் பட்டினியும் பெருகி வரும் நிலையில் ஏமன் முதல் வடகொரியா வரை பல மில்லியன் மக்களுக்கு இந்த அமைப்பு உணவளித்து ஆதரவுக் கரம் நீட்டி வருகிறது.
இத்தாலியின் ரோம் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு வறுமையில் வாடும் மக்களுக்கு கடந்த 58 ஆண்டுகளாக உணவளித்து வருகிறது.
1961ஆம் ஆண்டு ஐக்கிய நாடு அவை நிறுவிய இது உலகின் ஆகப் பெரிய மனிதாபிமான அமைப்பாக தொடர்ந்து வருகிறது. பசியின்மையையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்வது இந்த அமைப்பின் நோக்கம். கடந்த ஆண்டு மட்டும் பசி, பட்டினியால் திண்டாடும் மக்களைக் கொண்ட 88 நாடுகளில் சுமார் 100 மில்லியன் மக்களுக்கு இந்த அமைப்பு உதவிக்கரம் நீட்டியது.
உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளியல், இலக்கியம், அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபெல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான நோபெல் பரிசுகள் துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இலக்கியத்திற்கான பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.