அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டிருப்பதாக டுவிட்டர் அறிவித்துள்ளது. “வன்முறை அபாயத்தை” தடுக்கும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் டிரம்பின் ஆதரவாளர்கள் திரண்டு வன்முறையில் ஈடுபட்டதையடுத்து திரு டிரம்பின் டுவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்ட இரு தினங்களில் (ஜனவரி 8) அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையை திரு டிரம்ப் தூண்டியதாக பலர் குறிப்பிட்டு வருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற திரு பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தும் நிகழ்வின்போது வன்முறை நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் தமது கணக்கை முடக்கியதையடுத்து, அது பேச்சு சுதந்திரத்துக்குத் தடை விதிப்பதாக அதனைச் சாடிய திரு டிரம்ப், விரைவில் பெரும் அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக ஊடகச் செய்தியறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் சொந்தமாகவே சமூக ஊடகத் தளம் ஒன்றை உருவாக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கான @POTUSல் இந்த அறிக்கையை திரு டிரம்ப் வெளியிட்டார். அதனையும் டுவிட்டர் நீக்கிவிட்டது.
பேச்சு சுதந்திரத்திற்கு டுவிட்டர் தடை விதிப்பதாக திரு டிரம்பின் மகனும் டுவிட்டரைச் சாடியுள்ளார்.
இவ்விருவரின் பதிவுகள் மீண்டும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் இருப்பதாக டுவிட்டர் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது. திரு பைடன் பதவி ஏற்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் இரண்டாவது தாக்குதல்கூட நடத்த திட்டமிடப்படலாம்.
திரு பைடனின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என திரு டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டதை ஆயிரக்கணக்கானோர் பார்ப்பதையும் டுவிட்டர் சுட்டிக்காட்டியது.
திரு டிரம்பின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் கணக்குகளில் பதிவிடுவதும் காலவரையின்றி தடை செய்யப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பாக திரு டிரம்பின் ஆதரவாளர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்ட பார்லர் செயலியையும் கூகல் தடை செய்துள்ளது. செயலியில் மாற்றங்களைச் செய்யாவிடில் தாமும் தடை விதிக்கப்போவதாக ஆப்பிள் நிறுவனமும் எச்சரித்துள்ளது.
திரு டிரம்ப் உடனடியாக பதவி விலகாவிட்டால், அவரைப் பதவியிலிருந்து நீக்குவதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசப்படும் என நாடாளுமன்ற நாயகர் நான்சி பெலோசி கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.