தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் மூன்று மாடி குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நால்வர் மாண்டனர். மாண்டவர்களில் மூன்று மீட்புப் பணியாளர்களும் குடியிருப்பாளர் ஒருவரும் அடங்குவர். இந்தச் சம்பவம் இன்று நிகழ்ந்தது.
இடிபாடுகளுக்கு அடியில் சிலர் சிக்கிக்கொண்டிருப்பதாக அவசரகாலப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.
பேங்காக்கின் மேற்குப் பகுதியில் சொகுசுக் குடியிருப்புப் பகுதியில் இருந்த அந்தக் குடியிருப்புக் கட்டடம் இன்று அதிகாலை 6 மணி அளவில் தீப்பிடித்துக்கொண்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
தீயணைக்கப்பட்டதும் காலை 7 மணி அளவில் தீயில் கருகிய அந்தக் கட்டடத்துக்குள் தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியாளர்களும் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று கட்டடம் இடிந்து விழுந்தது.